இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் - ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
இதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவர்கள் அருகாமையில் இருக்கும் இ-சேவை மையத்தில் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.