வேலூர் | ஜூலை 13, 2026
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உலகத்தரம் வாய்ந்த மறுவாழ்வு சேவைகளும், அரசின் நலத்திட்ட உதவிகளும் இனி அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் "விழுதுகள்" ஒருங்கிணைந்த சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உலக வங்கி (World Bank) நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்’ கீழ் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 10 சேவை மையங்கள்: முழு விபரம்
மத்திய அரசு வரையறுத்துள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் இரண்டும், வட்டார அளவில் எட்டும் என மொத்தம் 10 மையங்கள் அமையவுள்ளன:
வருவாய் கோட்ட அளவிலான மையங்கள் (02):
(இவை விரைவில் முழுமையான செயல்பாட்டிற்கு வரவுள்ளன)
அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை, வேலூர்.
அரசு தாலுக்கா மருத்துவமனை, பேர்ணாம்பட்டு.
வட்டார அளவிலான மையங்கள் (08):
(இவை தற்பொழுது திறக்கப்பட்டுத் துவங்கிட முழுத் தயார் நிலையில் உள்ளன)
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊசூர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கணியம்பாடி.
வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம், வடுகந்தாங்கல்.
அரசு தாலுக்கா மருத்துவமனை, அணைக்கட்டு.
அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடி.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொன்னை.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பட்டி.
அரசு தலைமை மருத்துவமனை, குடியாத்தம்.
வழங்கப்படும் இலவச மறுவாழ்வுச் சேவைகள்:
இந்த மையங்களில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு பின்வரும் உயர்தர மருத்துவ மற்றும் மறுவாழ்வுச் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன:
மருத்துவச் சிகிச்சைகள்: பிசியோதெரபி (Physiotherapy), ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy), பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை (Speech Therapy), மற்றும் கண் பரிசோதனை.
மனநல & கல்விச் சேவைகள்: உளவியல் ஆலோசனை (Psychological Counselling) மற்றும் சிறப்புக் கல்வி (Special Education).
அரசு உதவிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID Card) பெற ஒரே இடத்தில் எளிதாக விண்ணப்பித்தல்.
பாதுகாவலர் பயிற்சி: மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான பிரத்யேக பயிற்சிகள்.
வீடு தேடி வரும் 100-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள்!
இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, வேலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற முன்களப் பணியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, அவர்களின் உடல்நலத் தேவைகளைக் கண்டறிந்து, உரிய விழுதுகள் மையங்கள் மூலமாக நான்கு வகையான அத்தியாவசிய மறுவாழ்வுச் சேவைகளை அவர்களின் இல்லம் அருகிலேயே பெற்றுத் தருவார்கள்.
“கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தரமான மறுவாழ்வு சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் நோக்கமாகும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்” என மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
இலவச உதவி எண் (Toll-Free):
1800 4250 111சைகை மொழியில் தொடர்பு கொள்ள (WhatsApp Video Call):
9498345350
