மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் முன்பருவப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள ஆண்/பெண் இருபாலரும் தங்கி பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள சிறப்பாசிரியர்கள் செவித்திறன்குறையுடையோருக்கு கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களோடு பேச்சு பயிற்சியும் அளிக்கின்றனர்.
பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு உண்ண உணவு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கு இலவச பயணச்சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கணினி வழி கற்பித்தல், வருடம் ஒருமுறை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுதல், மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க விளையாட்டு திடல் உடன் கூடிய பள்ளியாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களுக்கு விலையில்லா காதொலிக் கருவிகள் வழங்குதல், பேச்சுப்பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சேர்க்கை பெற தலைமையாசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரியில் அணுகவும். விவரம் வேண்டுவோர் 044-27267322 மற்றும் 9597465717 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.