
காஞ்சிபுரம், ஆக.15:
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் அலுவலகம் வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 7 பாடங்கள் கொண்ட பழைய பாடத்திட்டத்தின்படி 2002 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இம்மேலாண்மை நிலையத்தில் 10 பாடங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தின்படி இரு பருவ முறைகளாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
பழைய பாடத்திட்டம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டதாலும்,தற்போது புதிய பாடத்திட்டம் தொடங்கி இரு ஆண்டுகள் முடிவடைந்திருப்பதாலும் பழைய பாடத்திட் டங்கள் முடிவு கட்டப்படவுள்ளது.
எனவே பழைய பாடத்திட்டத்தின்படி தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கான துணைத் தேர்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியினை பழைய பாடத்திட்டத்தில் முழுநேரம் அல்லது அஞ்சல் வழியில் பயின்று தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணபிக்கலாம்.
2 பாஸ்போட் அளவு புகைப்படம், 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,கடைசியாக தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல் மற்றும் தேர்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத் தொகை ஆகியனவற்றுடன் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண்.5,வந்தவாசி சாலை, ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம்,காஞ்சிபுரம்}631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9894608112 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.